Publish Date: Mon, 02 Mar 2026 (16:20 IST)
Updated Date: Mon, 02 Mar 2026 (16:17 IST)
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியா ஏன் மௌனம் காக்கிறது என்பது தேசிய அளவில் விவாதமாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காமல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை மட்டுமே விடுத்துள்ளது. இதற்கு பல வலுவான காரணங்களை அரசு வட்டாரங்கள் முன்வைக்கின்றன.
முதலாவதாக, 2017 முதல் 2024 வரை கமேனி நான்கு முறை இந்தியாவின் உள்விவகாரங்களில் அதாவது காஷ்மீர், டெல்லி கலவரம், சிஏஏ ஆகியவற்றில் தலையிட்டு இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
மேலும், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற ஜி7 நாடுகள் எவையுமே அவருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை; மாறாக அவர் ஒரு சர்வாதிகாரி என்றே பல நாடுகள் விமர்சித்துள்ளன. இந்தியாவின் முக்கிய கூட்டாளிகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் கூட மௌனம் காக்கின்றன அல்லது ஈரானின் தாக்குதல்களால் அதிருப்தியில் உள்ளன.
இந்தியாவின் தேசிய நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, ஒரு காலத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தலைவருக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என அரசு கருதுகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை விட, உலகளாவிய ஜனநாயக நாடுகளின் நிலைப்பாட்டையே இந்தியா தற்போது பின்பற்றி வருகிறது.