இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே பலமுறை கூறிய நிலையில், நேற்று பிரதமர் மோடியுடன் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய பின்னரும், மீண்டும் "நான்தான் போரை நிறுத்தினேன்" என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நேற்று 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதாகவும், இந்த உரையாடலின்போது பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால்தான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி, டிரம்பிடம் தெரிவித்ததாகவும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை சந்தித்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசியபோது, "இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். அதே நேரத்தில், மோடி ஒரு சிறந்த மனிதர். இந்தியாவுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறோம். போரை நிறுத்துவதில் ஆசிம் முனீர் ஈடுபாடு கொண்டார். இந்திய தரப்பில் மோடியும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டார். இருவரும் அணு ஆயுத நாடுகள் என்பதால், இருவரிடமும் பேசி நான் தான் போரை நிறுத்தினேன்," என்று மீண்டும் உரிமை கொண்டாடியுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு பின்னரும், மீண்டும் "நான்தான் போரை நிறுத்தினேன்" என்று டிரம்ப் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.