இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் சூடுபிடித்துள்ள சூழலில், பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியம் (IMF) அமைப்பிடம் கூடுதல் நிதி உதவிக்காக கோரிக்கை வைத்திருந்தது. இதை ஏற்று, 1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ.8542 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிதி பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக அல்ல, எல்லை தாண்டி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பொருளாதார சீர்திருத்தங்களை சரியாக செயல்படுத்தாததை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில், IMF உறுப்பினராக உள்ள இந்தியா, கடன் வழங்கும் முடிவுக்கு எதிராகத் தங்களது கருத்தை உறுதியுடன் தெரிவித்துள்ளது. ஆனால், IMF விதிகளின்படி, இந்தவகை தீர்மானங்களில் எதிர்ப்பு வாக்களிக்கும் செயல்முறை இல்லாததால், இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து, பாகிஸ்தானுக்கு கடன் வழங்கப்பட்டதை இன்னும் சில நாடுகளும் கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.