இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரில் தங்களுக்கு ஆதரவாக இருந்த துருக்கி அதிபரை சந்தித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் அழித்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த பிரச்சினையில் இந்தியாவிற்கு இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்தன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களையும் வழங்கி உதவின.
தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், போர் சமயத்தில் தங்களுக்கு உதவிய துருக்கிக்கு நன்றி சொல்லும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் இருநாட்டு உறவுகள் குறித்தும் எரிசக்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். துருக்கி ஏற்கனவே ட்ரோன்கள் வழங்கி உதவிய நிலையில் இந்த சந்திப்புக்கு பிறகு மேலும் பல ராணுவ தளவாடங்களை பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K