சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இது மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் முடிந்துவிட்டது. இதையடுத்து, மார்ச் 4ஆம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்படும் போதைப் பொருட்கள் மற்றும் வலி நிவாரணிகள், மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்கு வருவதாகவும், இந்த போதைப்பொருட்கள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும், எனவே இந்த போதைப் பொருட்கள் நிறுத்தப்படும் வரை சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரிவிதிப்பால் உலகம் முழுவதும் பங்குச்சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கும் போது தான், இந்த வரிவிதிப்பால் எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.