Publish Date: Mon, 22 Sep 2025 (12:15 IST)
Updated Date: Mon, 22 Sep 2025 (12:16 IST)
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாகாது" என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் நிலத்தின் மையத்தில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் பதில் அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்கள், "பயங்கரவாதத்திற்குப் பரிசு" வழங்குவதாக அவர் சாடினார். "ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது. பல ஆண்டுகளாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஒரு பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்து வருகிறேன். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீபத்தில் அறிவித்திருந்தன. இந்த அறிவிப்பு, இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.