ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச்சபையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றியபோது ஏராளமான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் அவர் காலி சேர்கள் மத்தியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெதன்யாகு தனது பேச்சில், காசாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக, தனது உரை ஒலிபெருக்கிகள் மூலம் அங்கு ஒளிபரப்பப்படுவதாக தெரிவித்தார். மேலும், "இஸ்ரேலின் உளவுத்துறை சேவைகளால் கைப்பற்றப்பட்ட காசா மக்களின் செல்போன்கள் மூலமும் தனது உரை நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது" என்று அவர் கூறினார். "உங்களை நாங்கள் ஒரு நொடிகூட மறக்கவில்லை. இஸ்ரேலிய மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள்" என்று பிணைக்கைதிகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும். என் மக்களை வெளியேற விடுங்கள். "நீங்கள் அவ்வாறு செய்தால், வாழ்வீர்கள். இல்லையென்றால், இஸ்ரேல் உங்களை தேடி அழிக்கும்" என்று எச்சரித்தார்.
பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்த முடிவு "வெட்கக்கேடானது" என்றும், "யூதர்களுக்கும், அப்பாவி மக்களுக்கும் எதிரான பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்" என்றும் அவர் சாடினார்.
நெதன்யாகு தனது உரையின் முடிவில், இஸ்ரேல் மற்ற நாடுகளுக்காக போராடி வருவதாக கூறினார்.