Publish Date: Fri, 24 Apr 2026 (11:35 IST)
Updated Date: Fri, 24 Apr 2026 (11:37 IST)
ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அந்நாட்டின் மீது போரை துவங்கியது. போர் துவங்கி அடுத்த நாளே இஸ்ரேல் தாக்கியதில் ஈரான் உச்ச தலைவர் கமேனி அவரின் குடும்பத்தோடு கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரானும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் முயற்சியால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை. அதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பின் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தும் ஈரான் செல்லவில்லை.
ஒருபக்கம் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாது. அந்த பக்கமாக வரும் கப்பல்கள் மீது தாக்குதலையும் நடத்துகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. போர் நிறுத்தம் நீடிக்கும் நிலையில் ஹார்மூஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட முயற்சி செய்ததால் ஹார்மூஸை திறக்கமாட்டோம் என ஈரான் சொல்லிவிட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் ஈரானுடன் மீண்டும் போரை துவங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தீவிர தாக்குதலுக்கு அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது முடிவு செய்து விட்டோம். ஈரானில் பயங்கரவாத ஆட்சி நடக்கிறது. அதற்கு உறுதுணையாக இருக்கும் கமேனி குடும்பத்தை முழுமையாக அழிக்க அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
ஈரானை மீண்டும் இருளுக்கும் கற்காலத்திற்கும் தள்ளும் படியாக அந்த நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். அந்நாட்டின் பொருளாதார கட்டமைப்பை முழுமையாக சீர்குலைப்போம்.. இந்த முறை தாக்குதல் வேறு மாதிரி இருக்கும்.. பல உயிர்களையும் அது பறிக்கும் என அவர் கூறியிருக்கிறார்