இந்தோனேசியாவில் உள்ள ஒரு எரிமலை மவுண்ட் ரின்ஜானியில் மலையேற்றம் மேற்கொண்டபோது, சிகரத்திலிருந்து தவறி விழுந்த பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூலியானா மாரின்ஸ் என்ற இளம்பெண் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாட்களாக எரிமலை பிளவுக்குள் சிக்கியிருந்த அவரது உடல், நேற்று மீட்கப்பட்டதாக தெரிகிறது.
கடந்த சனிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் மலையேறியபோது, ஜூலியானா சுமார் 490 அடி ஆழமான பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார். ஆரம்பத்தில் அவர் "உதவிக்காக அலறிய" சத்தம் கேட்டதாகவும், ட்ரோன் காட்சிகளில் அவர் உயிருடன் இருந்ததை காட்டியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அடர்ந்த பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்பு படையினரால் அவர் இருக்கும் இடத்திற்கு உடனடியாக சென்றடைய முடியவில்லை.
மென்மையான மணலில் சிக்கியதால், கயிறுகள் மூலம் அவரை மேலே இழுப்பதும் சவாலாக இருந்ததாக உள்ளூர் மீட்புக் குழுத் தலைவர் முஹம்மது ஹரியாடி தெரிவித்தார். இறுதியாக, திங்கட்கிழமை ட்ரோன் காட்சிகளில் அவரது இருப்பிடம் மாறியிருப்பதை கண்டறிந்த பிறகு, மீட்பு படையினர் ஜூலியானாவை செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்டுள்ளனர்.
"நான்கு நாட்கள் கடுமையான முயற்சிக்கு பிறகு, மோசமான வானிலை மற்றும் நிலப்பரப்பு இருந்தபோதிலும், ஜூலியானாவின் உடலை இந்தோனேசிய மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர்" என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. ஜூலியானாவின் குடும்பத்தினரும் இந்த சோகச் செய்தியை இன்ஸ்டாகிராம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளனர். 12,224 அடி உயரமுள்ள மவுண்ட் ரின்ஜானி, இந்தோனேசியாவின் இரண்டாவது உயரமான எரிமலை. இங்கு மலையேற்றத்தின்போது பலர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.