இன்று நாசா - ஸ்பேஸ் எக்ஸ் கூட்டு முயற்சியில் ட்ராகன் விண்கலம் புறப்பட உள்ள நிலையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
ஆக்சியம் 4 என்ற திட்டத்தின் படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் அடங்கிய குழுவை நாசா - ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பி வைக்கிறது. இந்த 4 பேர் குழுவின் திட்ட தலைவராக பெக்கி விட்சன் செயல்படுகிறார்.
இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த சுபான்ஷூ சுக்லா, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலம் மூலம் இவர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் பல்வேறு இடையூறுகளால் தொடர்ந்து 6 முறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 22ம் தேதி ஏற்பட்ட கோளாறால காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட இந்த பயணம் இன்று தொடங்குகிறது. தற்போது வானிலை 90 சதவீதம் சாதகமாக உள்ளதால் இன்று ட்ராகன் விண்கலம் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுண்ட் டவுன் தொடங்கியுள்ள நிலையில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.01 மணிக்கு அமெரிக்காவின் ஜான் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலமாக ட்ராகன் விண்கலம் விண்ணை நோக்கி பாய்கிறது. இதில் முதல்முறையாக பயணிக்கும் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவிற்கு மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K