இந்தியாவில் தங்கியிருக்கும் முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கதேச மக்களிடம் பேசக்கூடாது, எனவே அவரைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், அதை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டதாக வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் சென்றுள்ள வங்கதேச பிரதமர் முகமது யூனுஸ், "மோடியுடன் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஷேக் ஹசீனாவை இந்தியாவில் வைத்திருப்பது உங்கள் விருப்பம், ஆனால் அவர் சமூக வலைத்தளத்தில் பேசுவதை நிறுத்த சொல்ல வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர், சமூக வலைத்தளத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டார்," என்று தெரிவித்தார்.
"ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி இந்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அவர் செய்த குற்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் பல குற்றங்கள் விசாரணையில் தெரியவரும் என்றும்," அவர் கூறினார். "இந்தியா எங்கள் அண்டை நாடு. நாங்கள் அவர்களுடன் எந்த பிரச்சனையிலும் இருக்க விரும்பவில்லை," என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.