செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஆழமாக பரவி வருவதால், வரும் ஆண்டுகளில் பெருநிறுவன வேலைகளை குறைக்க போவதாக அமேசான் சி.இ.ஓ ஆண்டி ஜாஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார். ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில், AI கருவிகள், குறிப்பாக ஜெனரேட்டிவ் AI, வேலை செய்யும் விதத்தையே மாற்றும் என்றும், இதனால் சில துறைகளில் குறைவான பணியாளர்களே தேவைப்படுவார்கள் என்றும் ஜாஸ்ஸி விளக்கமளித்துள்ளார்.
"எங்கள் நிறுவனத்தில் ஜெனரேட்டிவ் AI மற்றும் ஏஜென்ட்களை அதிகமாக பயன்படுத்தும்போது, நாம் வேலை செய்யும் முறை மாறும். இன்று செய்யும் சில பணிகளுக்கு குறைவான ஆட்களும், புதிய பணிகளுக்கு அதிக ஆட்களும் தேவைப்படுவார்கள்," என்று ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
எத்தனை வேலைகள் பாதிக்கப்படும் என்று அவர் நேரடியாக சொல்லவில்லை. ஆனால், 2022 முதல் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 27,000-க்கும் மேற்பட்ட வேலைகளை குறைத்துள்ளது. இது பெரும்பாலும் சாதனங்கள், சேவைகள் மற்றும் புத்தகப் பிரிவுகளில் நடந்த பணிநீக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் தற்போது 1,000-க்கும் மேற்பட்ட AI கருவிகளை உருவாக்கி வருகிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று ஜாஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். எதிர்கால போட்டியை சமாளிக்கவும், நிறுவனத்திற்கு மதிப்பு சேர்க்கவும் ஊழியர்கள் AI பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
AI ஆட்டோமேஷனை நோக்கி நிறுவனங்கள் நகர்வதால், பாரம்பரிய வேலைவாய்ப்புகள் குறையலாம். ஆனால், AI அறிவுள்ளவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.