கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை. திரையரங்கில் மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இது விக்ரம் போன்ற ஒரு மாஸ் நடிகருக்கு சராசரிக்குக் கீழான வசூல்தான். அதற்குக் காரணம் விக்ரம்தான் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். ஏனென்றால் அவரை நம்பி தியேட்டர் வந்த ரசிகர்களைப் பல ஆண்டுகளாக அவர் வைத்து செய்துள்ளார். அதன் காரணமாக ரசிகர்கள் அவர் படத்துக்கு செல்வதையே விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விக்ரம் தற்போது இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம், அதையடுத்து லோகேஷின் இணை இயக்குனர் விஷ்ணு எடாவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.