தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் ஊர்வசி. கதாநாயகியாக அறிமுகமான ஊர்வசி ஒரு கட்டத்துக்குப் பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக நடிக்கத் தொடங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த உள்ளொழுக்கு படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகை” விருதைப் பெற்றுள்ளார்.
முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக அறிமுகமான ஊர்வசி, அந்த படத்தின் வெற்றியால் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் முந்தானை முடிச்சு படத்துக்குப் பிறகு தனக்கு நடந்த சம்பவம் ஒன்றை சமீபத்தைய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அதில் “ முந்தானை முடிச்சு படம் வந்தபோது எனக்கு 13 வயதுதான். அப்போது நான் பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். அந்த படம் ரிலீஸானதும் பள்ளியில் மாணவர்கள் என் பின்னால் சுற்றத் தொடங்கினர். அதனால் பள்ளி நிர்வாகமே என்னை பள்ளியை விட்டு நின்றுகொள்ள சொன்னது” எனத் தெரிவித்துள்ளார்.