சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கவுள்ள அரசன்படத்தின் முன்னோட்ட வீடியோ கடந்த மாதம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாவதற்கு முதல் நாளே திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
இந்த முன்னோட்டக் காட்சியிலேயே வடசென்னை உலகத்தில் சொல்லப்படாத ஒரு கதை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும் சில நேர்காணல்களில் வடசென்னை படத்தின் உலகத்தில் நடக்கும் மற்றொரு கதை எனத் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் இடம்பெறப் போகும் சர்ப்ரைஸ் காட்சிகளுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர். அந்த சர்ப்ரைஸின் முதல் கட்டமாக விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தொடங்க திட்டமிட்டிருந்த ஷூட்டிங் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் –சிம்பு இடையிலான பஞ்சாயத்துதான் என்று சொல்லப்படுகிறது. ஐசரி கணேஷிடம் முன்பணம் வாங்கிவிட்டு நடித்துக் கொடுக்காமல் சிம்பு இழுத்தடிக்க அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்தார். இந்நிலையில் இப்போது தன்னிடம் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் அரசன் படத்தில் நடிக்கக் கூடாது என பிரச்சனையை மீண்டும் இழுத்துள்ளதால் அது சம்மந்தமானப் பேச்சுவார்த்தை இப்போது போய்க் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் ஷூட்டிங் நேற்றுத் தொடங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.