தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பாடல்களில் இடம்பெற்ற அவரது கவர்ச்சி நடனங்களும் காரணமாக அமைந்தன.
சிவாஜி வெற்றியால் ஸ்ரேயா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடிக்க அழைக்கப்பட்டார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது. கடைசியாக தமிழில் ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இந்நிலையில் அவரது பெயரில் போலியாக மர்ம நபர் ஒருவர் பலரைத் தொடர்புகொண்டு மோசடி செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் “என் பெயரில் யாரோ ஒருவர் மோசடி செய்வதாக நண்பர்கள் தெரிவித்தார்கள். அந்த செல்ஃபோன் எண் என்னுடையது அல்ல. அந்த எண்ணில் இருந்து தொடர்புகொண்டால் பதிலளிக்க வேண்டாம். இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த நபர் நான் மதிக்கும் , நான் இணைந்து பணியாற்ற விரும்பும் சில முக்கிய நபர்களிடமும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுபோன்று மோசடி செய்து ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? நல்ல வாழ்க்கையை வாழுங்கள்” எனக் கூறியுள்ளார்.