கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு குணமாகி தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
தற்போது அவர் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதற்காக அவரை வாழ்த்தி கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “சிவராஜ்குமாருக்கும் எனக்குமான உறவு 45 ஆண்டுகளாக நீடித்து வருவது. அவர் எனக்கு மகனைப் போல. நான் அவருக்கு சித்தப்பா மாதிரி. இதை நான் வீடியோவுக்காக சொல்லவில்லை. ” என புகழ்ந்துள்ளார்.
சமீபத்தில் தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிவராஜ் குமார் வந்திருந்தார். அப்போது கமல் பேசிய தமிழ்-கன்னட மொழிகள் பற்றியப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. அதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. மேலும் கம்லஹாசன் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்ததற்காக சிவராஜ் குமாருக்கும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் கமல்ஹாசனின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.