Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய ரேலா மருத்துவமனை!

Advertiesment
Rela Hospital

Prasanth K

, செவ்வாய், 10 ஜூன் 2025 (16:38 IST)

இரு குழந்தைகளின் தாய்க்கு இதய செயலிழப்பையும் தடுத்து நிறுத்தி சாதனை!

 

●        2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவும், ஆக்சிஜன் துணையுடனும் வாழ்ந்துவந்த 44 வயதுப்பெண் நோயாளி, உடல் ரீதியில் பல பிரச்சனைகளைக் கொண்டிருந்தார். தசைகளும் வலுவிழந்திருந்தன.

 

●        தொடக்கத்தில் அவருக்கு முடக்குவாதம் இருப்பது தெரியவந்தது. பின்னர் நாளடைவில் நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டது. கோவிட்-19, இப்பிரச்சனையைத் தீவிரமாக்கியது. இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்படும்  வாய்ப்பும் இருந்தது.

 

சென்னையைச் சேர்ந்த ரேலா மருத்துவமனை ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது. இரு பெண் குழந்தைகளின் தாயான திருமதி. கவிதா (44 வயது) நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இதன்மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற சூழலை அவர் கடந்துவிட்டார். அவருக்கு நுரையீரல் சுருக்கப் பிரச்சனை ஏற்பட்டு, நுரையீரல் கெட்டியாகவும் ஆகிவிட்டிருந்தது. இதன் விளைவாக மூச்சுவிடுதலில் பிரச்சனை இருந்ததுடன் அது அவரது இதயத்தையும் கடுமையாகப் பாதித்திருந்தது.

 

ஒரே நேரத்தில் இரண்டு நுரையீரல்களையும் உறுப்பு மாற்றம் செய்து சிகிச்சையளிப்பது என்பது அறுவை சிகிச்சைத்துறையில் முக்கியமான நிகழ்வாகும். இதனை செய்துமுடிக்க 8 மணி நேரம் பிடித்திருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையை இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவின் இயக்குநரும் முதுநிலை மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் ஸ்ரீநாத் விஜயசேகரன்,  நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் மருத்துவர்.ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான 30 பேர் கொண்ட மருத்துவக்குழு வெற்றிகரமாக செய்துமுடித்திருக்கிறது. அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை மருத்துவர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள்,  அவசர சிகிச்சையின்போது உடல் உறுப்புகளின் இயக்கத்தை உறுதிப்படுத்தும் பர்ஃப்யூஷனிஸ்ட்கள்(perfusionists) முதலிய பல்வேறு துறை வல்லுநர்கள் கொண்ட குழு அதுவாகும். 

 

தானம் பெறப்பட்ட நுரையீரல் என்னதான் கச்சிதமாகப் பொருந்தினாலும் நோயாளியின் நெஞ்சில் அது சரியாகப் பொருந்த கொஞ்சம் காலம் பிடிக்கும். ஏனென்றால் இந்நோயாளிக்குக் கடந்த 6 ஆண்டுகளாகவே படிப்படியாக நுரையீரல் சுருங்கிவந்ததுதான் காரணம். எனவேதான் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு என்பது நுணுக்கமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. அந்நோயாளி, உட்காரவும் நிற்கவும் நடக்கவும் போதுமான தசை பலம் தேவைப்பட்டதால் அதனைப்பெறும்வரை தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்க வேண்டிவந்தது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பல வாரங்களுக்குப் பிறகு அவரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்திருக்கிறது. அவரால் தன்னையும் தனது மகள்களையும் இப்போது கவனித்துக்கொள்ளவும் முடிகிறது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும் அண்மையில் அவரது பயாப்ஸி பரிசோதனையின் முடிவுகளின்படி உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட அவரது நுரையீரல்கள் சிறந்த முறையில் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

 

இதுகுறித்துப்பேசிய ரேலா மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா, “இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பது உண்மையிலேயே சிறப்பான விஷயமாகும். உயிர்காக்கும் இத்தகையை சிகிச்சை இருப்பதை நோயாளியே இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. நோய் முற்றிய நிலையில் இருந்த அவருக்கு  அறுவை சிகிச்சையே தேவை என்ற நிலை இருந்தது. அதிலும் குறிப்பாக,  சிகிச்சையின்போதும் சிகிச்சைக்குப் பிறகும் இடர் மிகுந்த பல்வேறு பக்க விளைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்ற சூழல் இருந்தது. மற்றவர்கள் அனைவரும் இதனை மிகப்பெரிய ரிஸ்க் என்று பார்த்த நிலையில் ரேலா மருத்துவமனையின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர்  குழுவோ, தனது வல்லுநத்துவதை வைத்து ஓர் உயிரைக்காப்பாற்றும் வாய்ப்பாக இதனைக் கண்டது. நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ‘நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை’ அவர்களது உயிரைக் காக்கும் என்பது தெரிவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும். மேலும், உறுப்பு தானத்தையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் வாழ்க்கையை வாழ்வதற்கான மற்றுமோர் வாய்ப்பை நாம் நோயாளிகளுக்கு வழங்கிவிடுகிறோம்” என்றார்.

 

நோயாளியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய நுரையீரல் மாற்றுப்பிரிவின் மருத்துவத் தலைவர் மருத்துவர் ஐஸ்வர்யா ராஜ்குமார், “கவிதாவின் கதை, இரண்டு விஷயங்களின் சாட்சியமாக அமைந்திருக்கிறது. ஒன்று, அவரது போராட்ட குணம். இரண்டாவது, உறுப்பு மாற்று அறுவை சிகிசையின் சக்தி.  2013 ஆம் ஆண்டில் அவருக்கு முடக்குவாதம் இருப்பது அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. பின்னர் 2016ல் அவரது உடல் நிலை படிப்படியாக மோசமடைந்து 2016வாக்கில் அவருக்கு நுரையீரல் நோய் இருப்பது தெரியவந்தது. நோயின் கடுமை காரணமாகவும் அவரது இரு மகள்களை கவனித்துக்கொள்ள குடும்பத்தின் அவசியம் கருதியும் அவர் இந்தியா திரும்ப நேர்ந்தது.  இந்நிலையில் கோவிட்-19 நோய்த்தொற்று, அவரது நுரையீரலின் இயக்கத்தை இன்னும் மோசமாக்கிவிட்டது.

 

நாளடைவில் அவர் படுத்தபடுக்கையாகிவிட்டார். மேலும் செயற்கை பிராண வாயுவை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் அவர் 2024ல் ரேலா மருத்துவமனைக்கு வந்தார். கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு 15லிட்டர் ஆக்சிஜன் தேவையாக இருந்தது. 2 ஆண்டுகளாக அவர் படுத்த படுக்கையாக இருந்ததால் மிகவும் சோர்ந்துபோயிருந்தார்.  உடனடியாக இரண்டு நுரையீரல்களையும் மாற்றியாக வேண்டும் என்ற நிலையில் அவர் இருந்தார். அவ்வாறு மாற்று நுரையீரல்கள் பொருத்தப்படாமல் இருந்தால் சில வாரங்களுக்குமேல் அவரால் உயிர் பிழைத்திருக்க முடியாது என்ற நிலை அவருக்கு இருந்தது.  அறுவை சிகிச்சைவரையிலான அவரது காலம் சவாலானதாக இருந்தது. அவரது ஆக்சிஜன் அளவை நிலைப்படுத்தவும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராடவும் அவர் பலமுறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. காலத்தோடு நடந்த அவரது  ஓட்டப்பந்தயத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட தருணம் ஒன்றும் வந்தது. அதுதான் அவருக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வகையிலான நுரையீரல்கள் கிடைத்த தருணம்” என்றார்.

 

இந்த அறுவை சிகிச்சை பற்றியும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சவால்கள் குறித்தும் பேசிய  இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவின் இயக்குநரும் முதுநிலை மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் ஸ்ரீநாத் விஜயசேகரன், “அவரது நெஞ்சப்பகுதிக்குப் பொருத்தமான அளவில் நுரையீரல்களைக் கண்டுபிடித்துப் பெறுவது நாங்கள் சந்தித்த சவால்களுள் முக்கியமானது. தானம் கொடுத்தவரின் நுரையீரல், அளவில் பெரியது. இதன் விளைவாக, அறுவை சிகிச்சைக்குப் பிறகும்கூட அவரது மார்புக்கூட்டைத் திறந்த நிலையில் வைத்திருந்து கண்காணிக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பின்னரே அதனை மூட வேண்டும் என்ற சூழல்... அறுவை சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும் சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைவதில் பல தடைகள் இருந்தன.  அவரின் உடல் தசையின் பருமன் மோசமாக இருந்தது. எனவே, சுயமாக சுவாசிக்கவும் வெண்டிலேட்டரின் உதவியின்றி இயங்கவும் அவருக்கு ஆற்றல் தேவைப்பட்டது. அது, மெதுவானதாகும் கடினமான ஒன்றாகவும் இருந்தது. எனவேதான் அவர் 6-8 வாரங்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்க வேண்டி வந்தது. படுத்த படுக்கை நோயாளி என்ற நிலையிலிருந்து மெல்லத் தேறி, நடப்பது, மற்றவரின் உதவியின்றி சாப்பிடுவது, தனது குழந்தைகளை கவனித்துக்கொள்வது, செயற்கை சுவாசத்தின் துணையின்றி இயங்குவது என்று முன்னேறிவிட்டார். அவருக்காக நாங்கள் சந்தித்த ஒவ்வொரு சவாலும் உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக மாறியிருக்கிறது. நோயின் கடுமையால் பாதிக்கப்பட்டவர் என்ற நிலையிலிருந்து பரிபூரண குணமடைந்தவர் என்ற நிலைக்கு வந்திருப்பது, அவரது தளராத நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி ஆகும்” என்றார்.

 

இந்த இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை அடுத்து, சில மாதங்களில் பயாப்ஸி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, கவிதாவின் உறுப்புகள் சிறப்பான முறையில் இயங்கிவருவது தெரியவந்திருக்கிறது.  அவரால் இனி இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும்.  தனது குழந்தைகளை அவரால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதுடன் தனது தினசரி நடவடிக்கைகளையும் முன்பைப்போலவே தொடர முடியும் என்பதே அவர் பரிபூரணமாக குணமடைந்துவிட்டார் என்பதற்கான சான்றாகும்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை எழுந்தவுடன் இந்த 7 செயல்களை செய்யுங்கள்.. நோயே வராது..!