லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது, இந்த போராட்டத்தை கவர் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டின் பத்திரிகையாளர் ஒருவரின் காலில் அமெரிக்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியேற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தை அடக்க 2000 சிறப்புப் படையினரை ட்ரம்ப் அனுப்பிய நிலையில், போராட்டக்காரர்களை வெளியேற்ற சிறப்புப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த போராட்டத்தை ஆஸ்திரேலியாவின் முன்னணி ஊடகம் ஒன்று செய்தியை கவர் செய்து கொண்டிருந்தது. பெண் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்த செய்திகளை கூறிக் கொண்டிருக்கும்போது, கேமராமேன் அவரை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென, அமெரிக்க போலீஸ் பெண் பத்திரிகையாளரின் காலில் சுட்டது. இதனால், பெண் பத்திரிகையாளர் மற்றும் அவருடைய கேமராமேனும் அலறியடித்து ஓடிய காட்சிகள் வீடியோவாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிகை சுதந்திரம் குறித்து அமெரிக்கா அடிக்கடி பேசி வரும் நிலையில், பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.