தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.
ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கி வரும் அவர் அறிவுரை செய்யும் விதமாக பல பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
இப்போது அவர் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மெண்டல் மனதில் உள்ளிட்ட படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. மேலும் சில படங்களில் நடிகராகவும் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் அவர் தன்னுடைய ஹிட் படங்களான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் பற்றி பேசியுள்ளார். அதில் “புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தின் எழுத்துப் பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளது. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் கதையையும் எழுதி வருகிறேன்.” எனக் கூறியுள்ளார்.