தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம் அமைத்ததாக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அந்த பதிவின் கடைசியில் அவர் இதெல்லாம் தனது கனவில் வந்தது என்று கூறி இருப்பது தான் ஹைலைட்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியில் ஒரு சில அரசியல் பிரபலங்கள் தற்போது இணைந்து வருகின்றனர். விரைவில் இன்னும் சில பிரபலங்கள் இணைவார்கள் என்றும் அதேபோல் திரையுலகில் உள்ள சில பிரபலங்களும் அவருடைய கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ஏற்கனவே விஜய்யின் அரசியல் குறித்து சமீப காலத்தில் அளித்த பேட்டிகளில் கூறிய நிலையில் தற்போது அவர் விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம் அமைப்பது போல் கனவு கண்டதாக கூறியுள்ளார். இந்த பதிவை இதோ:
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் …..
அது கனவு!
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ?
ஆனா சத்தியமா வந்தது.
கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் …இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்.