இம்மாத தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்து பீதியைக் கிளப்பினார். சுந்தர் சி விலகலுக்கு அவர் சொன்ன கதை ரஜினிகாந்துக்குப் பிடிக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் வேறு இயக்குனர்களிடம் தற்போது கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் கார்த்திக் சுப்பராஜ், நித்திலன் சுவாமிநாதன், ஆர் ஜே பாலாகி என பலரது பெயர் அடிபடுகிறது. இதையடுத்து லேட்டஸ்ட் அப்டேட்டாக பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ராஜ்கமல் நிறுவனத்துக்குப் பிடித்துள்ளதாகவும் அவரைக் கதையை முழுமையாக எழுத சொல்லியும் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சிம்புவுக்கு சொல்லி ஓகே வாங்கி வைத்திருந்த கதையைதான் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினிக்கு சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதில் சில மாற்றங்களை மட்டும் அவர் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.