தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாதவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். valiant எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனியை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். இது இசைக் கலைஞர்களோடு அவர் ஒத்திகைகள் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. நாளை மறுநாள் இந்த சிம்பொனி இசை கச்சேரி லண்டனில் உள்ள ஒரு இசையரங்கில் நடக்கவுள்ளது.
அதற்காக அவர் சென்னையில் இருந்து லண்டன் செல்லும் போது விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் இசையமைப்பாளர் தேவா தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்த ராயல்டி வேண்டாம் என்று சொல்லியுள்ளாரே என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த இளையராஜா “இந்த நேரத்தில் இந்த கேள்வி எதுக்கு?” என சற்றே டென்ஷனாகி பதிலளித்தார்.