சமீபகாலமாக பழைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அப்படிப் பயன்படுத்தப்படுபவை பெரும்பாலானவை இளையராஜா பாடல்கள்தான். ஆனால் அந்த பாடல்களின் உரிமை இளையராஜாவிடம் உள்ளதா அல்லது இசை நிறுவனங்களிடம் உள்ளதா என்பது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பல குளறுபடிகள் உருவாகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சகலகலா வல்லவன் படத்தில் வரும் இளமை இதோ இதோ என்ற பாடலை அஜித்தின் சண்டை காட்சி ஒன்றில் பயன்படுத்தி இருந்தனர். அதுபோல அர்ஜூன் தாஸ் எண்ட்ரிக்கு ஒத்த ரூபா தாரேன் என்ற பழைய பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் தன்னிடம் அதற்கான அனுமதி வாங்கவில்லை என அவர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மேல் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தில் இருக்கும் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ஓடிக்கொண்டிருந்த குட் பேட் அக்லி திரைப்படம் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் இது சம்மந்தமாக செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென இளையராஜா தரப்புக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.