கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை. திரையரங்கில் மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அடுத்து விக்ரம் ஒரு அறிமுக இயக்குனரின் கதையில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வீர தீர சூரன் படத்துக்குப் பிறகு மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார் விக்ரம். ஆனால் இரண்டு பேர் சொன்ன கதையும் அவருக்குத் திருப்தி அளிக்காததால் அந்த படங்கள் அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க விக்ரம் சம்மதித்துள்ளார். அந்த இயக்குனர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது. அந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஒரு ப்ரமோஷன் வீடியோவோடு இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.