சமீப காலமாக இயக்குனரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரனின் பேச்சு பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதுநாள் வரை கொஞ்சம் விலகியே இருந்த ராஜகுமாரன் இந்த மாதிரி சர்ச்சை பேச்சுகளால் இப்போது லைம் லைட்டில் இருந்து வருகிறார். ஒட்டு மொத்த youtube சேனலுமே அவர் பக்கம் தான் திரும்பி இருக்கிறது. இயக்குனர்களை பற்றியும் முன்னணி நடிகர்களை பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார் ராஜகுமாரன்.
விஜயின் அரசியல் வருகை பற்றியும் கடுமையாக விமர்சித்திருந்தார். டெபாசிட் கூட அவருக்கு கிடைக்காது. வார்டு மெம்பர் கூட ஆகாத ஒருவரால் எப்படி முதல்வராக முடியும் என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்திருந்தார் ராஜகுமாரன். அதுபோல வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களை பற்றியும் கடுமையாக விமர்சித்து இருந்தார். ரஜினி கமல் இவர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.
இதை எல்லாம் பொறுத்துக் கொண்ட ரசிகர்களால் இயக்குனர் மகேந்திரனை பற்றி ராஜகுமாரன் கூறியதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ரசிகர்கள் உட்பட பிரபலங்களும் அதற்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். சினிமாவில் குறுகிய படைப்புகளை மகேந்திரன் எடுத்திருந்தாலும் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் மகேந்திரன் பெயர் இல்லாமல் இருக்காது.
ரஜினியை வைத்து ஜானி படத்தை எடுத்தவர். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் கவனிக்கத்தக்க படமாக மாறியது.. ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குனரும் மகேந்திரன் தான். அவரைப் பற்றி ராஜகுமாரன் இவரெல்லாம் ஒரு இயக்குனரா ?அவர் எடுத்த படங்களை நான் பார்க்கவே மாட்டேன், பார்த்ததும் இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் மகேந்திரனை பற்றி ராஜகுமாரன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. மகேந்திரனை பொறுத்தவரைக்கும் மக்கள் இயக்குனர் கிடையாது. தயாரிப்பாளருக்கு லாபம் பெற்றுக் கொடுக்கக் கூடிய இயக்குனரும் கிடையாது. அந்த அடிப்படையில் ராஜகுமாரன் சொல்லியிருப்பார்.
ஏன் பாலச்சந்தர் படங்களை கூட நான் விமர்சித்திருக்கிறேன். தமிழ் பண்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்களை பாலச்சந்தர் எடுத்திருக்கிறார். அதை எதிர்த்து நான் பத்திரிகைகளில் எழுதினேன். உடனே பாலச்சந்தர் நான் ஹிட் படங்களை கொடுத்ததே இல்லையா என்று கேட்டார். சார் நீங்க ஹிட் கொடுத்தீங்க, கொடுக்கலைனு நான் சொல்லல. தமிழ் பண்பாட்டுக்கு எதிரா உங்க படம் இருக்கா இல்லையானு கேட்டேன். உடனே போனை வைத்துவிட்டார். ஆக அவரவர் கருத்துக்கு உரிமை இருக்கிறது என பயில்வான் ரங்க நாதன் கூறியுள்ளார்.