போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் திரையுலகில் பலர் கலக்கமடைந்திருப்பதாகவும், தங்கள் மீதும் விசாரணை வளையம் வருமோ என்ற அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் இரு தரப்பினர் மோதி கொண்ட நிலையில், இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அந்த பாரில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதும், அந்த பாரில் இருந்து போதைப்பொருள்களை பல தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் வாங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.
முதற்கட்டமாக, இந்த பாரில் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், நடிகர்கள் பங்கேற்கும் இரவு விருந்துகளுக்கும் இங்கிருந்துதான் போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில், மேலும் சில திரையுலகினர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், நடிகர் ஸ்ரீகாந்துக்கு நெருங்கிய நட்பில் உள்ள திரையுலகினரையும் போலீசார் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், இன்னும் சில திரையுலகினரின் கைது நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுவதால், தமிழ் திரையுலகினர் பெரும் கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.