Publish Date: Mon, 23 Jun 2025 (17:31 IST)
Updated Date: Mon, 23 Jun 2025 (17:32 IST)
பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் போலீசார், பிரதீப் என்பவரை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்து விசாரித்தபோது, அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாத் என்பவரிடம் இருந்து போதைப்பொருளை பெற்றதாகவும், இதுபோல பல நடிகர்களும் பெற்றதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாத்திடம் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் போதைப்பொருளை ₹12,000-க்கு வாங்கி 40 முறை பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஸ்ரீகாந்த் ₹72,000 ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்களும் போலீசாரிடம் உள்ளன.
போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் மேலும் சில நடிகர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.