உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஜூன் 11 அன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதையடுத்து, அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களும் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்கம் அபாரமாக விளையாடி 136 ரன்கள் எடுத்தார். கேப்டன் பவுமா 66 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக மார்க்கம் தேர்வு செய்யப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு இருப்பதால்தான் அவர்களால் ஜொலிக்க முடியவில்லை என விமர்சனம் செய்தவர்களுக்கு, இந்த வெற்றியே பதிலடி என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.