லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரண்டு நாட்கள் மட்டுமே ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், அநேகமாக இன்று மூன்றாவது நாள் முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு விக்கெட் விழுந்துவிட்டால் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆகிவிடும் நிலையில், 250 ரன்களுக்குள் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு இலக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த மூன்றாவது நாளே ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று போட்டி முடிந்துவிட வாய்ப்பு இருப்பதாக வர்ணனையாளர்கள் கருதி வருகின்றனர்.
நேற்றைய ஆஸ்திரேலியா அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அலெக்ஸ் கேரி மட்டுமே 43 ரன்கள் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்தார். முன்னணி பேட்ஸ்மேன்கள் ஐந்து பேர் சிங்கிள் இலக்கத்தில் ரன்களை எடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணியின் ரபாடா மற்றும் லுங்கி நிகிடி அபாரமாக பந்துவீசி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.