ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. ஆனால், போட்டிக்குப் பின் நடந்த பரிசளிப்பு விழாவில், இந்திய வீரர்கள் கோப்பை மற்றும் பதக்கங்கள் இல்லாமல் கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேபஜித் சைகியா அளித்த பேட்டியில், "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலில், ஒரு பாகிஸ்தானிய அமைச்சரின் கையால் கோப்பையை பெற வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்" என்று கூறினார். இந்த முடிவு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எடுத்த ஒன்று என்றும், யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை என்றும் இந்திய அணி தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
மேலும் அமீரக கிரிக்கெட் வாரிய துணை தலைவர் காலித் அல் ஜாரூனிடம் இருந்து கோப்பையை பெற இந்திய அணி விருப்பம் தெரிவித்தது. ஆனால், மொஹ்சின் நக்வி இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.