Publish Date: Thu, 19 Mar 2026 (15:36 IST)
Updated Date: Thu, 19 Mar 2026 (15:39 IST)
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தவெகவின் முக்கிய நிர்வாகிகள், கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தவெக தலைவர் விஜய் என பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஜயை மூன்று முறை டெல்லிக்கு நேரில் வரவழைத்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கரூர் சம்பவம் தொடர்பான பல கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அவர் ஏன் தாமதமாக சென்றார்? அவ்வளவு மக்கள் குடியிருந்தும் அதற்கான பாதுகாப்பு அம்சங்களை ஏன் செய்யவில்லை? மக்கள் பாதிக்கப்பட்டபோது விஜியும், தவெக நிர்வாகிகளும் ஏன் அங்கிருந்து சென்றார்கள்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில்தான், கடந்த 15ம் தேதி அவர் 3வது முறையாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விட்டு வெளியே வரும்போது உற்சாகமாக சிரித்துக் கொண்டே வந்தார்.. மேலும் காரின் மேல் கதவை திறந்து அங்கு நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் சிரித்துக் கொண்டே கையாட்டி விட்டு போனார். இது தொடர்பான புகைப்படங்களை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் கலந்து கொண்டு ஒருவர் இப்படியா சிரித்துக் கொண்டு வருவார்? என திட்டினார்கள்.
இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் கசிந்திருக்கிறது. தவெகவை பொருத்தவரை கரூர் சம்பவத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க திமுகவின் சதி என்றே நம்புகிறார்கள். குறிப்பாக அவர்கள் செந்தில் பாலாஜி மீது புகார் சொல்கிறார்கள். கடைசியாக கடந்த 15ஆம் தேதி விஜய் விசாரணையை கலந்து கொண்ட போது சிபிஐ அதிகாரிகளின் அடுத்த டார்கெட் செந்தில் பாலாஜிதான் என்பது விஜய்க்கு தெரிந்துவிட்டதாம். அதை நோக்கிதான் அவர்களின் கேள்வி அமைந்திருக்கிறது.. இதையடுத்தே விஜய் மகிழ்ச்சியாக வெளியே வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 17ம் தேதி செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணையில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.