Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்? முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் விளக்கம்!

Advertiesment
MK Stalin

Mahendran

, ஞாயிறு, 9 நவம்பர் 2025 (16:39 IST)
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏன் இந்த திருத்தத்தை எதிர்க்கிறோம் என்பது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
 
"சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், போதுமான கால அவகாசம் தராமல், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், இதை அவசர அவசரமாகச் செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நம் நிலைப்பாடு!" என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 
தேசிய அளவிலான எதிர்ப்பு: தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக மோசடி செய்வதாக ராகுல் காந்தி ஏற்கனவே விளக்கமளித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரும் இந்த SIR-ஐத் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.
 
SIR அறிவித்தபோதே அதைச் "சதி" என்று உணர்ந்து எதிர்த்ததாகவும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை (நவம்பர் 11 அன்று) அறிவித்திருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
SIR பணிக்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்திலேயே (Enumeration Form) பல குளறுபடிகள் இருப்பதை முதல்வர் சுட்டிக்காட்டினார்:
 
உறவினர் பெயர்: படிவத்தில், "முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர்" என்று கேட்கப்பட்டுள்ளது. உறவினர் என்றால் யார் (அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள்)? இதில் தெளிவு இல்லை.
 
முதலில் யார் பெயரை எழுத வேண்டும் (விண்ணப்பதாரரா அல்லது உறவினரா) என்பதில் குழப்பம் நிலவுவதாகவும், சிறிய தவறு இருந்தாலும்கூட படிவம் நிராகரிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் ஸ்டாலின் அச்சம் தெரிவித்தார்.
 
புகைப்படம் ஒட்டுவதில் குழப்பம்: படிவத்தில் புகைப்படத்தை அச்சிட்டு, "தற்போதைய புகைப்படத்தை ஒட்டவும்" என்று சொல்லப்பட்டாலும், மாநிலத் தேர்தல் அதிகாரி விருப்பமிருந்தால் ஒட்டலாம் என்று அரசியல் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். "புகைப்படம் ஒட்டவில்லை என்றால், வாக்குரிமை பறிக்கப்படுமா, பறிக்கப்படாதா?" என்ற குழப்பம் நீடிப்பதாகவும், முடிவெடுக்கும் அதிகாரம் ERO-க்களின் கையில் இருப்பதால், முடிவுகள் மாறுபட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
 
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) பல இடங்களில் வருவதில்லை. வந்தாலும், போதிய அளவில் கணக்கீட்டுப் படிவங்களைக் கொண்டு வருவதில்லை. ஒரு நாளைக்கு 30 படிவங்களுக்கு மேல் தரப்படுவது இல்லை. இந்தச் சூழலில், ஒரு தொகுதியின் ERO மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட படிவங்களை இவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வாறு சேகரித்து, கணினிமயமாக்கி டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார் என்று கேள்வி எழுப்பினார்.
 
BLO-க்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றால், அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் உறுதியாகிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். "உங்களின் வாக்கு நீக்கப்படுமா?" என்று கேட்டால், அந்த அபாயம் நிச்சயம் இருக்கிறது. அதைத் தடுக்க, உங்கள் பகுதிக்குரிய BLO யார் என்று கேட்டு, அவரிடம் இருந்து படிவத்தை வாங்கி, சரியாக நிரப்பி, திரும்பச் சமர்ப்பித்து, மறக்காமல் ஒப்புகைச் சீட்டைப் பெற வேண்டும். இதுதான் உங்கள் வாக்குரிமையைப் பாதுகாக்கும் ஒரே வழி.
 
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க திமுக துணை நிற்கத் தயாராக இருப்பதாக முதல்வர் அறிவித்தார். SIR-ஆல் பாதிக்கப்படும் அனைத்துப் பொதுமக்களுக்காகவும் திமுக சார்பில் உதவி மையம் (Helpline) அமைக்கப்பட்டுள்ளது.
 
தொடர்பு எண்: 08065420020 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
 
"நம் வாக்குரிமையைப் பறிக்கும் ஆபத்து வாசல் தேடி வந்துவிட்டது! அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்புடன் இருந்து, தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம்!" என்று கூறி ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.
 
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் விஜய்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!