தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்ட்டன் டிகாக். அந்த அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இப்போது அந்த அணியின் பேட்டிங் நம்பிக்கையாக உள்ளார் டிகாக்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டிகாக் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு ஓய்வை அறிவித்தார். அப்போது ஓய்வு பற்றி பேசிய அவர் “நான் கடந்த 11 ஆண்டுகளாக அணிக்கு உண்மையாக விளையாடியுள்ளேன். பிரான்ச்சைஸ் டி 20 கிரிக்கெட்களில் கிடைக்கும் பணத்துக்காகதான் நான் இப்போது ஓய்வை அறிவித்துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எந்தவொரு சாதாரண மனிதனும் செய்ய நினைக்கும் செயல் இதுதான்.” எனக் கூறியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் அவர் ஓய்வு முடிவில் இருந்து மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பினார், திரும்பியதோடு மட்டும் இல்லாமல் அதன் பின்னர் விளையாடிய முதல் தொடரிலேயே தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது ஏழாவது தொடர் நாயகன் விருதாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருது வென்ற விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா ஏழு முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர்.