நடிகர் விஜய்யின் சமீபத்திய அரசியல் விமர்சனத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாக பதிலளித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் விபத்து மற்றும் கோடநாடு வழக்கு குறித்து பேசினார்.
"உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் முதல்வர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்" என்ற விஜய்யின் விமர்சனம் குறித்து துரைமுருகன் மறைமுகமாக விஜய்யை குற்றம் சாட்டினார்:
"கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூட சொல்லாத அவர் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர் என்றால், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து, "அவர் நிலைமையை அவர் சொல்கிறார். ஆனால், சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் தமிழக அரசு செய்யும்" என்று துரைமுருகன் திட்டவட்டமாக கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் 2026 தேர்தல் குறித்த கணிப்புக்கு, "அவர் அங்கு சொல்லி கொடுப்பதை சொல்கிறார் அவ்வளவுதான்" என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.