தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளித்தார்.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில், 6.16 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் டிசம்பர் 4-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்பதால், படிவங்களை பூர்த்தி செய்த வாக்காளர்கள் காலதாமதமின்றி அவற்றை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். கால நீட்டிப்பு வழங்கப்படாது.
83,256 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 33,000 தன்னார்வலர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 50% பதிவேற்றம் முடிந்துள்ளது.
தகுதியானவர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்கவும், முகவரி மாறியவர்கள் படிவம் 8-ஐ பயன்படுத்திப் பெயரை சேர்க்கவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், நீக்கப்பட்ட பெயர்கள் குறித்து வாக்குச்சாவடி வாரியாக விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.