Publish Date: Fri, 20 Mar 2026 (21:07 IST)
Updated Date: Fri, 20 Mar 2026 (21:12 IST)
அன்புமணிக்கும் அவரின் தந்தை ராமதாஸுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் பாமகவும் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது. பாமகவுக்கு நான்தான் தலைவர் என ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. ஆனால் 2026 ஆகஸ்டு மாதம் வரை பாமகவுக்கு அன்புமணிதான் தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டது..
ஏற்கனவே அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார். அந்த கூட்டணியில் அவருக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் ராமதாஸ் யாருடைய கூட்டணி அமைப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே மகன் அன்புமணி இருக்கும் அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் செல்ல மாட்டார். திமுக கூட்டணிக்கு போகலாம் என்றால் அங்கே விடுதலை சிறுத்தை திருமாவளவன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார். எனவே, ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான், சமீபத்தில் கட்சி தொடங்கிய சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ராமதாஸ் கூட்டணி அமைத்திருக்கிறார்.தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு ராமதாஸ், சசிகலா இருவரும் கூட்டாக இதை செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.