தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மக்களை சந்திக்க முடிவெடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் செல்ல முடிவெடுத்தார். அதன்படி திருச்சியில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடினார்கள்.
அடுத்த வாரம் சனிக்கிழமை திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் சென்றார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் நாமக்கல், கரூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கும் செல்ல முடிவெடுத்தார். நாமக்கல்லில் காலை 8.30 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்க அவரைப்பார்க்க மக்கள் கூடினார்கள். அதன்பின் 12.30 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தவெகவினரும், விஜய் ரசிகர்களும் விஜயின் பிரச்சாரை சுற்றி வந்து கொண்டிருந்ததால் விஜயின் வேன் மெல்ல மெல்ல ஊர்ந்து நாமக்கல்லுக்கு வர 3 மணி ஆகிவிட்டது. அங்கு பேசிவிட்டு அங்கிருந்து கரூருக்கு செல்ல முடிவெடுத்தார் விஜய். அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் சென்று விடக்கூடிய கரூருக்கு செல விஜயின் வாகனம் 4 மணி நேரம் எடுத்துக் கொண்டது. செல்லும் வழியெங்கும் அவரைக் காண பொதுமக்களும், தவெக தொண்டர்களும், ரசிகர்களும் கூடினார்கள்.
மாலை 7 மணியளவில் போலீசார் அனுமதி கொடுத்திருந்த இடத்திற்கு சென்று பேசத் தொடங்கினார் விஜய். விஜய் அங்கு மதியமே வந்துவிடுவார் என காலை முதலே கரூரில் பலரும் பல ஆயிரம் மக்கள் காத்திருந்தனர். அதில் பலரும் தண்ணீர், உணவு இல்லாமல் கஷ்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போதுதான் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்தது.
இதன் காரணமாக ஒரு மாத காலம் விஜய் வீட்டில் இருந்தே வெளியே வரவில்லை. அதோடு கடுமையான விமர்சனத்திற்கும் ஆளானார். கரூரில் 41 மக்கள் இறந்ததற்கு விஜய்தான் பொறுப்பு என பலரும் பேசினார்கள். விஜய் ஒரே ஒரு வீடியோ மட்டும் வெளியிட்டு விட்டு அமைதியாகிவிட்டார்.
அதன்பின் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் சொன்னபின் மீண்டும் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 4ம் தேதி முதல் மீண்டும் மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்தை துவங்க திட்டமிட்டிருக்கிறார் விஜய். டிசம்பர் 4ம் தேதி அவர் சேலத்தில் பிரச்சாரம் செய்ய வருகிறார். இதற்காக அனுமதி கேட்டு தவெக சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்பு வார இறுதியில் இறுதி நாளான சனிக்கிழமை மக்களை சந்தித்தார் விஜய். தற்போது டிசம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை வருகிறார். வார இறுதி நாள் என்பதால்தான் கரூரில் அதிக மக்கள் கூடி விட்டார்கள். அதுதான் அவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு காரணம் என விமர்சனம் வந்ததால் விஜய் தனது முடிவை மாற்றி இருக்கிறார்.