தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.
கடந்த தேர்தல்களில் தேமுதிக கட்சி அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து வந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி சீட் தருவதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் அதிமுக மாற்றி பேசியதாக தேமுதிக அதிருப்தியில் இருக்கிறது. இந்நிலையில் விரைவில் கட்சி மாநாடு நடத்தவும், தேர்தல் கூட்டணி நிலைபாட்டை அறிவிக்கவும் தேமுதிக தயாராகி வருகிறது.
அதிமுக மீது அதிருப்தியில் உள்ள தேமுதிக மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்வி உள்ளது. அதேசமயம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தோடு தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் “இந்த கேள்விக்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன். விஜய் எங்கள் வீட்டுப் பையன். இன்று நேற்றல்ல சிறுவயது முதல் அவரை தெரியும். சாலிகிராமத்தில் இருவரது வீடுமே பக்கம் பக்கம்தான். தற்போது அவர் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும் எங்கள் வீட்டு பிள்ளைதான்.
ஆனால் அவரது அரசியல் நிலைபாடு என்ன என்பது பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கூட்டணி வைப்பீர்களா என்று எங்களை கேட்பதை விட, கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆன தமிழக வெற்றிக் கழகத்திடம்தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் விஜய்க்கு தேமுதிகவுடன் கூட்டணியில் ஆர்வம் இருந்தால் அதற்கு தேமுதிகவும் ரெஸ்பான்ஸ் செய்யும் மனநிலையில் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் முதல் விருப்பத்தை தவெக வெளிப்படுத்த வேண்டும் என தேமுதிக எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
Edit by Prasanth.K