Publish Date: Mon, 23 Sep 2019 (20:33 IST)
Updated Date: Mon, 23 Sep 2019 (20:35 IST)
சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது அபார திறமையை பார்த்து திமுகவின் மூத்த நிர்வாகிகளே வியந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு பெரும் பங்கு வகித்தவர் உதயநிதி ஸ்டாலின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் திமுக எம்பி ஒருவர் உதயநிதி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். இந்த மனு பரிசீலனை செய்யப்படும் போது உதயநிதி போட்டியிடுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.
இந்த நிலையில் ஒரு சில மூத்த திமுக தலைவர்கள் விக்கிரவாண்டி தொகுதிகளில் உதயநிதி போட்டியிட வேண்டாம் என்று அறிவுரை கூறி வருவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே தமிழக சட்டசபை மூன்றரை ஆண்டுகாலம் முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் சட்டசபைக்கு உதயநிதி முதன்முதலாக போட்டியிட வேண்டாம் என்றும், வரும் 2021 தேர்தலில் திமுக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் என்பதால் அப்போது ஏதாவது ஒரு பாதுகாப்பான தொகுதியில் உதயநிதியை போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்கலாம் என்றும் கூறி வருவதாக செய்திகள் பரவி வருகிறது
மேலும் விக்கிரவாண்டி தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி அல்ல என்றும், ஒருவேளை இந்த தொகுதியில் உதயநிதி போட்டியிட்டு தோல்வி அடைந்தால் முதல் தேர்தலில் தோல்வி அடைந்த களங்கம் ஏற்படும் என்றும் அந்த நிலைக்கு உதயநிதியை ஆளாக்க வேண்டாம் என்றும் மூத்த தலைவர்கள் அறிவுரை கூறி வருவதாக தெரிகிறது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிடும் சந்தேகமே என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
sivalingam
Publish Date: Mon, 23 Sep 2019 (20:33 IST)
Updated Date: Mon, 23 Sep 2019 (20:35 IST)