Publish Date: Sat, 30 Dec 2017 (12:14 IST)
Updated Date: Sat, 30 Dec 2017 (12:22 IST)
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பின் டிடிவி தினகரன் ஆட்சியை கைப்பற்றும் மன நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஜெ.வின் மறைவிற்கு பின், கட்சியை தன் வசம் வைத்திருந்த சசிகலா, சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், டிடிவி தினகரணை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்து சென்றார்.
ஆனால், பல களோபரங்களுக்கு பின் தற்போது ஆட்சி மற்றும் கட்சி இரண்டுமே எடப்பாடி கையில் இருக்கிறது. அதிமுக தற்போது எடப்பாடி-ஓபிஎஸ் என்ற இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. தனக்கு எதிராக செயல்பட துவங்கிய ஒபிஎஸ்-எடப்பாடி ஆகியோர் மீது கடுமையான கோபத்தில் இருந்த தினகரன், இந்த ஆட்சியை எப்படியாவது அகற்றுவோம் எனவே கூறிவந்தார்.
ஆனால், ஆர்.கே.நகரின் மாபெரும் வெற்றி கட்சியை எப்படியாவது நாம் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வரவைத்துள்ளதாம். அவர் பக்கம் ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களை சபாநாயகர் நீக்கம் செய்த வழக்கில் தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என அவர் உறுதியாக நம்புகிறார். இதை அவர் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலும் கூறினார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 40 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக கூறப்படுகிறது. அவர்களின் 12 அமைச்சர்கள் அடக்கம். இன்னும் மேலும் சிலர் தன் பக்கம் வருவார்கள் என தினகரன் கணக்கு போடுகிறார். அதனால்தான், நேரம் வரும் போது எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் எனக்கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறார்.
தினகரனின் திட்டம் இதுதான். குறைவான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தால் பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவது. அதிக எண்ணிக்கையிலான ஆதரவு கிடைத்தால் ‘ தினகரனே முதல்வர்’ என்ற கோஷத்துடன் அவரின் ஆதரவாளர்கள் கிளம்புவார்கள் எனத் தெரிகிறது.
அதன் பின் டீல் ஒத்துப்போகும் போது தன் தலைமையில் புதிய அமைச்சரவை அமைத்து, ஆட்சியை அவர் கைப்பற்றுவார் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.