Publish Date: Fri, 29 Dec 2017 (10:27 IST)
Updated Date: Fri, 29 Dec 2017 (10:34 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா தற்போது மௌன விரதம் கடை பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் வெற்றிக்கு பின் டிடிவி தினகரன் நேற்று சசிகலாவ சந்திப்பதற்காக பெங்களூர் அக்ரஹார சிறைக்கு சென்றார். காலை 11.42 மணிக்கு உள்ளே சென்ற தினகரன் மாலை 2.53 மணிக்கு வெளியே வந்தார். அவருடன் வழக்கறிஞர் சிலரும் சென்றிருந்தனர்.
அதன்பின், சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “ ஜெ.வின் நினைவு நாளில் இருந்து சசிகலா, மௌன விரதம் இருந்து வருகிறார். ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றேன். சிலர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி காகிதத்தில் எழுதி காண்பித்தேன். அதற்கு அவர் சரி என்பதை போல் தலையாட்டினார்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது போல் படிப்படியாக அவர் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என வேண்டியே சசிகலா சிறையில் மௌன விரதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறம் என்றாலும், ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை கமிஷன், சசிகலாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ.விற்கு அளித்த சிகிச்சைகள் குறித்து 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அதை தவிர்க்கவே சசிகலா மௌன விரதம் இருக்கிறாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.