Publish Date: Thu, 21 Dec 2023 (10:55 IST)
Updated Date: Thu, 21 Dec 2023 (10:57 IST)
அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்துள்ளதால் அமைச்சர் பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சொத்து வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை அடுத்து பொன்முடி உடனே சிறைக்கு செல்ல வாய்ப்பில்லை என்றாலும் அவர் 30 நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட் சென்று சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜாமீன் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.