நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், காவல் துறையினர் மீது அரிவாள் வெட்டு முயற்சி நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.
பாப்பாக்குடி பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையே மோதல் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உதவி ஆய்வாளர் முருகன் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக இரண்டு சிறுவர்கள் திடீரென காவலர்களை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன், தற்காப்பிற்காக தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 17 வயது சிறுவன் ஒருவனின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இரண்டு சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றபோது, காவலர்கள் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அதையும் மீறி அந்த சிறுவர்கள் அரிவாளுடன் வெட்ட வந்ததால், தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
காயமடைந்த சிறுவன் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.