தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ளார்.
காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறும். செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கும்.
அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும். டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும்.
தமிழகம் முழுவதும் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X (ட்விட்டர்) பக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, கடந்த ஆண்டை போலவே பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பள்ளிக் கல்வித்துறையின் 2025-26ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளதாகவும், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.