தமிழக காவல்துறை, ரவுடிகளை பிடிப்பதற்காக மொபைல் செயலியை பயன்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் 550 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்.ஆர்.எஸ் என்ற மொபைல் செயலியை தமிழக காவல்துறை பயன்படுத்தி வருகிறது. இந்த செயலி, முக அடையாளத்தின் மூலம் குற்றம் செய்த நபர்களை கண்டறிய பயன்படுகிறது.
இந்த செயலியின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் பதிவான வழக்குகள், அவற்றில் சிக்கிய நபர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் ரவுடிகள் குறித்த தகவல்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மிக எளிதாக ரவுடிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஸ்மார்ட் காவலர் என்ற மொபைல் செயலியிலும் ரவுடிகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், சந்தேக நபர்கள் பிடிபட்டால், அவர்கள் குற்ற வழக்கில் சிக்கியவர்களா என்பதை சில நொடிகளில் கண்டுபிடிக்க முடியும்.
இத்தகைய செயலியின் மூலம், ரவுடிகள், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் என 30,000 பேரின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளிகளை கைது செய்ய இது மிகவும் உதவியாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.