கடந்த பல வருடங்களாக, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி இல்லாமல் இருக்கும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதுகிறார். இருப்பினும், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழக மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கச்சத்தீவில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேர் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டி, மூன்று தமிழ் மீனவர்களை கைது செய்துள்ளது. இதனால், மீனவர் சங்கங்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன.