Publish Date: Sun, 02 Mar 2025 (15:58 IST)
Updated Date: Sun, 02 Mar 2025 (15:59 IST)
கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமை பறிக்கப்பட்டதற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று தமிழக கவர்னர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று நான் ராமேஸ்வரம் சென்றிருந்தபோது துன்பத்தில் உழலும் மீனவ சமுதாய சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்தித்தேன். அவர்களின் நிலையை பார்த்து மிகுந்த இரக்கம் கொள்கிறேன்.
மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு 1974ஆம் ஆண்டு செய்யப்பட்ட அநியாய ஒப்பந்தமே காரணம். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டதற்கும் அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம்.
அன்றிலிருந்து இன்று வரை மீனவர் சமுதாயம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
மத்திய அரசை குறை கூறுவதற்கு பதிலாக, தமிழக அரசு ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்," என அவர் தெரிவித்துள்ளார்.