தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 34 வயது விவசாயக் கூலி தொழிலாளி மணிகண்டன் என்பவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வருமான வரித் துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதாரண விவசாய கூலி வேலை செய்து வரும் மணிகண்டனுக்கு, எதிர்பாராதவிதமாக வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸில், அவரது பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் ஒரு கோடி ஐந்து லட்சத்து நான்காயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நோட்டீஸ் வந்த பிறகே, மணிகண்டனுக்கு தனது வங்கி கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதே தெரியவந்துள்ளது. இது அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனடியாக அவர் வருமான வரித் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று, தனக்கும் இந்த பணப் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து வருமான வரித் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கிக் கணக்கில் பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் மர்ம நபர்கள் மோசடி செய்வதற்காக மணிகண்டனின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தினார்களா? என்ற அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.