தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று காலை முதல் இணையவழியில் தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2 லட்சம் பி.இ. மற்றும் பி.டெக். இடங்களை இந்தக் கலந்தாய்வு மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளது:
முதல் சுற்று: 200 முதல் 179 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருக்கும் 39,145 மாணவர்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறும்.
இரண்டாவது சுற்று: ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி, 178.965 முதல் 143.085 கட்-ஆப் மதிப்பெண்கள் வைத்திருக்கும் 25,376 மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள்.
மூன்றாவது சுற்று: ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி, 143 முதல் 77.500 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றிருக்கும் 1,01,588 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரையிலும், துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 23 வரையிலும் நடைபெறும்.
இந்தக் கலந்தாய்வு முழுவதும் www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாகவே நடைபெறும்.
மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
1. கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு முன், மாணவர்கள் அந்தக் கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிடுவது நல்லது.
2. பயில போகும் பாடத்தை தேர்வு செய்யும் முன்பு, அது பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்
3. பேராசிரியர்கள் தொடர்பான தவறான தகவல்களை அளித்த 17 பொறியியல் கல்லூரிகள், இந்த ஆண்டு முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் பங்கேற்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளது. இது குறித்த தகவல்களையும் மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
4. கல்லூரிகளை தேர்வு செய்யும்போது, மாணவர்கள் போக்குவரத்து வசதி, தங்கும் வசதி, கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் என அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.